Menu
Recent Post



நம் உடலில் முக்கியாமாய் நாம் கருதும், அதிக முக்கியத்துவம் தரும் ஒரு உறுப்பு என்றால் அது நம் தோல் என்றே கூறலாம் ! ஆம், பண்டைய காலம் தொட்டு இன்று வரை சரும பராமரிப்பு நம் அன்றாட வாழ்வின் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இயற்கையோ, செயற்கையோ நம் சருமம் எவ்வித மாசு மருவுமின்றி மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருந்தால் போதுமென்று பல பொருட்களை பயன்படுத்துகிறோம் நாம்.

ஆனால் சருமப் பிரச்சினைகள் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, முகத்தில் பருக்கள், வியர்க்குருக்கள், உடலில் நுண்ணுயிர்த் தொற்று, வெயிலினால் உண்டாகும் எரிச்சல், கட்டி, ஒவ்வாமையால் ஏற்படக்கூடிய தடிப்பு, புண் , கொசுக்கடியால் ஏற்படும் புண்கள் இப்படி பல....... ஆனால் அனைத்தின் முடிவும் ஒன்று தான் - நம் சருமத்தில் தழும்புகளாக பதிந்து விடுகின்றன... 

இப்படி அனைத்து விதமான சரும பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கும் ஏற்ற ஒரு முறை தான் நான் இன்று பதிவிடும் இந்த " அதிசய வேப்பிலை எண்ணெய்" - பெயருக்கேற்றார் போல் இது உங்கள் சருமத்தில் பல அதிசயங்கள் புரியும். இதோ அதன் செய்முறை :

தேவையான பொருட்கள் :

1. சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெய் - 1 கப்
2. பசுமையான இளம் வேப்பிலை - ஒரு கைப்பிடி
3. கஸ்தூரி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
4. அதிமதுரத்தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை:

1. முதலில் வேப்பிலைகளை சிறு உலக்கையில் தட்டிக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் தட்டி வைத்த வேப்பிலைகளை போட்டு , மஞ்சள் தூள் மற்றும் அதிமதுரத்தூள் போட்டு மிகக்குறைந்த தீயில் வைக்கவும் (எண்ணெய் கொதிக்கக் கூடாது)
3. சிறிது சிறிதாக சூடாகி எண்ணெயில் உள்ள வேப்பிலைகள் மொறு மொறுப்பான பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும் 
4. சூடு ஆறிய பின்னர் வடிக்ட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்

உபயோகிக்கும் முறை:

குளிப்பதற்கு 30 முதல் 45 நிமிடங்கள் முன்னர் இந்த எண்ணெயை தடவி நன்றாக மேல்நோக்கி மசாஜ் செய்யவும் (10 நிமிடங்கள் )
அல்லது, இரவு உறங்கும் முன்னர் எண்ணெய் தடவி காலை எழுந்ததும் குளிக்கவும்



பயன்கள்:

வேப்பிலை நல்ல கிருமிநாசினி. அதுமட்டுமல்லாது கொசுக்கடியிலிருந்து உங்களைக் காப்பாற்றும் (எனவே இரவு எண்ணெய் தடவிவிட்டு தூங்குவது மிகவும் சிறப்பு)

மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி, பருக்களை போக்கும், சருமத்திற்கு பொலிவு தரும்

அதிமதுரத்தூள் சருமத்தின் நிறம் மேம்பட உதவும். கருந்திட்டுக்களை மெல்ல நீக்கும்.

இதை தொடர்ந்து உபயோகித்தால் சருமம் சீராகும். தழும்புகள் மறையும் (நாள்பட்ட தழும்புகள் மறைவதற்கு அதிக நாட்களாகும்)



0



காலையோ மாலையோ பால் குடிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது என்றோ... தினமும் பால் குடி நல்லா ஸ்ட்ராங்காக வளர்வாய் என்று தாய் தன் குழந்தைகளிடமோ ....இன்னும் இது போல் நிறைய சொல்லாடல்களை நாம் கேட்டிருப்போம்!! காரணம் உண்மையிலேயே பாலில் கிட்டத்தட்ட அனைத்து விதமான சத்துக்களும் அடங்கியுள்ளன . உதாரணமாக, கார்போஹைட்ரேட், சர்க்கரை, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் சில கனிமங்கள் (மினரல்கள்) போன்றவை...

அதெல்லாம் தெரிந்த விஷயம் தானே!! ஆனால் உண்மையில் நீங்கள் அருந்தும் பாலில் இச்சத்துக்கள் அனைத்தும் உள்ளதா என்பது நீங்கள் அருந்தும் பாலை பொறுத்தது!! 

ஆம் பசும்பாலா பாக்கெட் பாலா?? பாக்கெட் பாலில் எந்த வகை என்று நிறைய கேள்விகள்.... இதோ இக்கட்டுரையில் பாலின் வகைகளைப் பற்றிய சிறு தகவல். 

பசும்பாலில் உள்ள சத்துக்களின் அளவு:


பொதுவாக, நாம் வாங்கும் அல்லது நம் வீட்டு பசுவில் இருந்து கறக்கும் பாலில் உள்ள சத்துக்கள் மாறுபடும் .குறிப்பாக கொழுப்புச் சத்தின் அளவு 5 - 6 % வரை பசும்பாலிலும், 5.8 - 7 % வரை எருமைப்பாலிலும் இருக்கும்.

பாக்கெட் பாலின் சத்து அளவீடு: 

பாக்கெட் பாலில் உள்ள சத்துக்கள் எவ்வளவு என்று நாம் அறிவதற்கு முன் ஒரு தகவலை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் . நாம் கடைகளில் பால் வாங்கச் செல்லும் பொழுது பார்த்திருப்போம் - பல வண்ணங்களில் பால் பாக்கெட்டுக்களை! பலர் அறிந்திருக்கலாம் , சிலர் அறியாமலும் இருந்திருக்கலாம்! விஷயம் என்னவெனில், பாக்கெட்டுக்களில் வரும் பால்கள் பெரும்பாலும் பாலின் கொழுப்புச் சத்தின் அளவைக் கொண்டு பல வகையாக பிரிக்கப்படுகின்றன. இன்னொரு முக்கியமான தகவல், கொழுப்பு நீங்கலாக மற்ற சத்துக்கள் அனைத்தையும் SNF (Solid Not Fat) என்று குறிப்பர்; அதன் அளவீட்டைக் கொண்டும் பாலின் வகை மாறுபடும் . ஆக இவ்விரண்டின் அளவுகளை பொறுத்து பாலின் வகைகள்* இதோ:
Related image

1. கொழுப்பு நிறைந்த பால் (Full fat / Full cream milk) - இந்த பாலில் கொழுப்புச் சத்து 6 % மற்றும் SNF எனப்படும் கொழுப்பு தவிர மற்ற சத்துக்களின் அளவு 9% என இருக்கும்

2. நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized milk)  - இப்பால் தான் பெரும்பாலானோர் தினசரி பயன்படுத்தும் பால். இதில் இருக்கும் கொழுப்பின் அளவு 4.5 % , SNF அளவு 8.5%

3. சமன்படுத்தப்பட்ட பால் (Toned milk) - இதில் இருக்கும் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களின் அளவு முறையே 3% மற்றும் 8.5% ஆகும்

4. டபுள் டோன்டு பால் (Double toned milk) - இதில் 2% கொழுப்புச்சத்தும் 9% இதர சத்துக்களும் அடங்கியுள்ளது

5. கொழுப்பு அகற்றிய பால் (Skimmed milk) - இப்பாலில் கொழுப்பு அறவே நீக்கப்பட்டோ அல்லது 0.5% என்ற அளவிலோ இருக்கும். 

ஆக, நாம் வாங்கும் பாக்கெட் பாலில் இவ்வளவு தகவல்கள் ஒளிந்துள்ளது! 
சரி,எப்படி கொழுப்பின் அளவைக் கொண்டு பாலை பிரிப்பார்கள் என்று சிலருக்கு கேள்வி எழும்பலாம்.. ஏனெனில் பல ஆயிரம் லிட்டர் கணக்கில் பால் பெறப்பட்டு பதப்படுத்தப்படும் பொழுது இது எப்படி நடக்கும் ?? 
அதாவது , நாம் பல இனிப்பு வகைகளோ ஐஸ்க்ரீமோ செய்வதற்கு க்ரீம் உபயோகித்து இருப்போம். அது பாலின் கொழுப்பே ! ஆம், முதலில் பாலில் இருந்து தேவைக்கதிகமான கொழுப்பை நீக்கி க்ரீமாகவோ, அல்லது கொழுப்பை அறவே அகற்றி ஸ்கிம்டு மில்க் எனப்படும் கொழுப்பற்ற பாலாகவோ தேவைக்கேற்ப மாற்றுவார்கள். இதற்காக் க்ரீம் செபரேட்டர் எனும் மெஷின் பயன்படுத்துவார்கள்.

இவையல்லாமல், வேறு சில சொற்களையும் நீங்கள் கண்டிருக்கலாம் - Pasteurized மற்றும் Homogenized போன்றவை.

அதாவது நாம் பசும்பால் வாங்கியவுடன் அதை அடுப்பில் காய்ச்சி வைப்போம், நுண்ணுயிரிகள் அழிவதற்காக. இதே போல் தான் பாக்கெட் பாலும் நுண்ணுயிரிகளை அழிப்பதற்காக சூடுபடுத்தப்படும்; ஆனால் கொதிக்க வைக்கமாட்டார்கள் . மிதமான சூட்டில் 63/ 72 டிகிரி செல்ஸியஸில் சூடுபடுத்துவார்கள் . இதைத்தான் பதப்படுத்துதல் அல்லது ஆங்கிலத்தில் Pasteurization என்று கூறுவார்கள். இதனால் தான் பாக்கெட் பாலை சிலர் திரும்பவும் காய்ச்சாமல் மில்க் ஷேக் போன்றவற்றிற்கு அப்படியே பயன்படுத்துவார்கள் - பொதுவாக ஜூஸ் கடைகளில் நீங்கள் கண்டிருக்கலாம்!

அடுத்ததாக பெரும்பாலான சமயங்களில் பால் காய்ச்சும் போது கவனிக்கும் ஒரு விசயம் - பாக்கெட் பாலில் அவ்வளவாக ஆடை படியாது! இதற்குக் காரணம் நீங்கள் வாங்கும் பாலின் கொழுப்பளவு மட்டுமல்ல ஹோமோஜினைசேசன் (Homogenization) எனப்படும் ஒரு செய்முறை ஆகும். அதாவது பாலில் இருக்கும் கொழுப்புக்களின் அமைப்பு (structure and shape) சிறிது பெரிதென மாறுபட்டதாக இருக்கும். அதனால் தான் நாம் பால் காய்ச்சிய பின்னரோ அல்லது குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பொழுதோ மேற்புறத்தில் ஒரு ஆடை படிந்து விடுகிறது. இதை தடுக்கவே, பாலில் இருக்கும் கொழுப்புக்களை குறிப்பிட்ட அளவை எட்டுவதற்காக, மிகவும் சிறிய குழாயின் வழியே மிகுந்த அழுத்தத்துடன் பாலை அனுப்புவார்கள். இப்படி செய்வதன் மூலம் அனைத்து கொழுப்புக்களும் ஒரே அளவில் வந்துவிடும் . இங்கே கவனிக்கத்தக்கது- நீங்கள் பாசுந்தியோ, ரபடியோ, அல்லது பால்கோவாவோ செய்கிறீர்களென்றால் இந்த ஹோமோஜினைஸ்டு பாலைத் தவிர்க்கவும் !

--------------------------
* இவை நாட்டிற்கு நாடு மாறுபடும்... நான் குறிப்பிட்டுள்ளவை நம் நாட்டில் பின்பற்றப்படும் அளவீட்டு முறையே!
0



அப்பள ரோல் செய்ய:
ஒரு கப் துருவிய காய்கறிகள் கேரட் காலிஃப்ளவர் முட்டைக்கோஸ்
1/4 கப் பொடியாக நறுக்கிய பீன்ஸ்
1 மேசைக்கரண்டி எண்ணெய்
2 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கிய பருப்பு வகைகள் (முந்திரி, பாதாம், பிஸ்தா)
சிறிது உலர் திராட்சை
1 தேக்கரண்டி சீரகம்
1 தேக்கரண்டி மிளகாய் தூள்
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி கரம் மசாலா
உப்பு தேவைக்கேற்ப

5 அப்பளம்
2 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கிய மல்லி இலை
எண்ணெய்: பொரிக்க

க்ரேவி செய்ய:
2 மேசைக்கரண்டி நெய்
1 கப் அரைத்த தக்காளி விழுது
1/2 கப் வெங்காய விழுது
ஒரு தேக்கரண்டி சீரகம்
ஒரு தேக்கரண்டி சோம்பு
ஒரு தேக்கரண்டி கரம் மசாலா
ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள்
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
2 மேசைக்கரண்டி ப்ரெஷ் க்ரீம்
1 மேசைக்கரண்டி வெண்ணெய்
உப்பு தேவைக்கேற்ப

அலங்கரிக்க:
50 கிராம் துருவிய பனீர்
பொடியாக நறுக்கிய மல்லி இலை

செய்முறை:
  1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் உலர்திராட்சை பருப்பு வகைகள் மற்றும் துருவிய காய்கறிகள் அனைத்தையும் சேர்க்கவும்.
  2. பின்னர் பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
  3. அடுத்ததாக அனைத்து மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி ஒரு மூடி கொண்டு மூடி மிதமான தீயில் 5 முதல் 6 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
  4. இறுதியாக பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
  5. ஒரு அப்பளத்தை எடுத்து அதை பாதியாக வெட்டி கையில் தண்ணீர் தொட்டு அதை மிருதுவாக்கவும்.
  6. அதில் செய்து வைத்த ஸ்டஃப்பிங்கை வைத்து முக்கோணமாக மடித்து இரண்டு ஓரங்களையும் தண்ணீர் கொண்டு சீல் செய்யவும்
  7. இவ்வாறு அனைத்து அப்பளங்களையும் செய்து பின்னர் ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஷாலோ ஃப்ரை செய்து எடுக்கவும்.
  8. கிரேவி செய்ய ஒரு கடாயில் நெய்யை சூடுபடுத்தி சீரகம் மற்றும் சோம்பு தாளிக்கவும்
  9. பின்னர் வெங்காய விழுது மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.
  10. வெங்காயம் வெந்த உடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்.
  11. பின்னர் தக்காளி விழுதையும் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை மூடி போட்டு வேக விடவும்.
  12. மசாலா நன்றாக வெந்து சுருண்ட உடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிரேவியை கொதிக்கவிடவும்.
  13. இறுதியாக பொரித்து வைத்த அப்பள ரோலை கிரேவியில் சேர்த்து ஃப்ரெஷ் கிரீம் மற்றும் வெண்ணெய் சேர்த்து கிளறவும்.
  14. பரிமாறும் தட்டில் அப்பள ரோலை கிரேவியுடன் வைத்து மேலே துருவிய பன்னீர் மற்றும் கொத்துமல்லி இலைகள் தூவி பரிமாறவும்.
  15. சுவையான பாரம்பரிய வெஜ் பட்டியாலா தயார்
எனது டிப்:
இது ரொட்டி மற்றும் சப்பாத்திக்கேற்ற சுவையான சைட் டிஷ்
0


நீரின்றி அமையாது உலகு !! மெய்தான்....
நம் உடலின் அனைத்து செயல்பாடுகளும் செவ்வையாக நடைபெற நீர் இன்றியமையாத பங்கு வகிக்கிறது ! ஒருவருக்கு தேவயான நீரின் அளவு வேண்டுமானால் அவரின் வயது, உடல் அமைப்பு, வாழும் இடம், தட்பவெப்ப நிலை போன்றவற்றால் மாறுபடுமே தவிர, உடலின் சீரான இயக்கத்திற்கு - இரத்த ஓட்டத்தை சீராக்க, உடலின் கழிவுகளை சிறுநீர் வியர்வை மூலம் வெளியாக்க, என அனைத்திற்கும் நீர் மிகவும் அவசியம்.

அதெல்லாம் சரி , எங்களுக்குத் தெரியும்......தண்ணி குடி தண்ணி குடினா என்ன பண்றது ??? சப்புன்னு இருக்கே !!! போர் அடிக்குதுனு நீங்க சொல்றது காதில் விழுது.....அதுக்கான சில டிப்ஸ் தான் இந்த கட்டுரை.

விரும்பி தண்ணீர் குடிக்க சில வழிகள் :
1. தண்ணீர் பாட்டில் அல்லது ஜக்கில் உங்களுக்கு பிடித்த பழங்களை துண்டுகளாக்கி போட்டு வையுங்கள். உதாரணமாக, எலுமிச்சை, ஆரஞ்ச், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, கிவி - இப்படி உங்களுக்கு பிடித்தவை. தண்ணீருக்கு சுவை தருவதோடு புத்துணர்வும் அளிக்கும்

2.  பழங்கள் மட்டும் தான் போடணும்னு இல்லை... நல்ல புத்துணர்வு தரக்கூடிய புதினா இலைகள் அல்லது கொஞ்சம் துளசியோ , ரோஸ்மேரியோ ...அட அது கூட வேண்டாம்ங்க, இஞ்சி ஒரு துண்டு கூட போட்டு வைக்கலாம்

3. இந்த வரிசையில் முக்கியமா நம்மூர் டிப்ஸ் ஒன்று கண்டிப்பா சொல்லியே ஆகணும்.. அதுதாங்க சீரகத் தண்ணீர் ; சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தான் அருந்த வேடுமென்றில்லை! கொஞ்சம் சீரகத்தை தண்ணீர் பானையில் போட்டு வைத்தாலே போதுமானது! உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளும் தண்ணீர் இப்படி இருந்தால் ரொம்ப நல்லது. உணவு செரிமானத்தில் பெரும் பங்கு உண்டு இதற்கு!

4. அடுத்து நான் சொல்லப் போகும் முறை எல்லோருக்கும் ரொம்பவே பிடித்த முறை! உங்களுக்கு பிடித்த பழங்களை சிறு துண்டுகளாக்கி ஐஸ் ட்ரேயில் போட்டு நீர் ஊற்றி உறைய வையுங்கள்.. தண்ணீர் குடிக்கும் சமயம், 2 அல்லது 3 ஐஸ் கட்டிகளை எடுத்துப் போட்டு குடித்தால் சில்லுன்னு புத்துணர்வாய் இருக்கும்.

இப்படி எந்த முறையிலும் உங்களுக்கு தண்ணீர் குடிக்க பிடிக்கவில்லையா?? கவலையை விடுங்கள்!! குடிக்க பிடிக்கலைனா தண்ணீரை சாப்பிடலாம்....அதாவது நீர் சத்து அதிகமுள்ள காய்கனி வகைகளை சாப்பிடலாம். தர்பூசணி, முள்ளங்கி போல..


இப்பொழுது தண்ணீர் அருந்தும் வழிமுறை பற்றி பார்க்கலாம்!
முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் - தண்ணீரை வாய் வைத்துக் குடியுங்கள். அதுவும் நிறுத்தி நிதானமாக பொறுமையாக ! ஒரு மிடறு தண்ணீர் குடித்தால் அதை வாயில் வைத்து எச்சிலுடன் கலந்த பின் மெதுவாக தொண்டையில் இறக்குங்கள்.. முக்கியமாக, அண்ணாந்து குடிக்கக்கூடாது! மற்றவர் குடிக்கவேண்டுமென்றால் தனியே குவளை வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சுக் குழாய், உணவுக்குழாய் என அடுத்தடுத்து ஒன்றாக இருப்பதால், இப்படி வாய் வைத்து பொறுமையாய் குடிப்பதே சிறந்தது.

தண்ணீர் போதுமான அளவு குடிக்காவிட்டால் என்ன நடக்கும் ???

1. உடல் சோர்வடையும், உடல் எடை குறைவு மற்றும் சத்துக் குறைவும் ஏற்படும்
2. நா வறட்சி ஏற்படும்
3. சிறுநீர் அடர்நிறமாக மாறும். சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்பும் அதிகம்
4. மயக்கம் ஏற்படும்

இறுதியாக நான் சொல்ல விரும்புவது - உங்களால் போதிய அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள இயலவில்லையெனில் சில புதிய யுக்திகளை கையாளலாம். உங்கள் அலைபேசியில் நீர் அருந்தும் இடைவெளிக்கேற்ப அலார்ம் வைப்பது; எப்பொழுதும் தண்ணீர் பானை மற்றும் பாட்டில்களை நிரப்பி வைப்பது; உங்கள் கைப்பை, கார் போன்று நாலைந்து இடங்களில் தண்ணீர் பாட்டில்கள் வைத்துக் கொள்வது ..இன்னும் இது போல!!


படங்கள்: கூகிள்
0


தேவையான பொருட்கள்: 
மீனை ஊறவைக்க (மேரினேட்):
நடுத்தரமான மீன்: 3 (துண்டுகளாக்கியது)
எலுமிச்சைச் சாறு: 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்: 1/4 தேக்கரண்டி
மிளகுத்தூள்: 1 தேக்கரண்டி
உப்பு: தேவைக்கு
குழம்பு செய்ய:
தேங்காய் எண்ணெய் : 2 மேசைக்கரண்டி
கடுகு: 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை: 1 கொத்து
இஞ்சி & பூண்டு (நறுக்கியது/விழுது) : தலா 1 தேக்கரண்டி
கீறிய பச்சை மிளகாய்: 3
நறுக்கிய வெங்காயம் : 2 (நடுத்தர அளவுள்ளது)
தக்காளி: 2-3 (நறுக்கியது)
முதல் & இரண்டாம் தேங்காய்ப்பால் : 1 கப்
மூன்றாம் தேங்காய்ப்பால் : 1 கப்
மஞ்சள் தூள்: 1/4 தேக்கரண்டி
மிளகுத்தூள்: 1 தேக்கரண்டி

செய்முறை:

  1. முதலில் மீன் துண்டுகளில் எலுமிச்சைச்சாறு,மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி ஊற வைக்கவும்
                                   
  2. தவாவில் எண்ணெய் ஊற்றி மீன் துண்டுகளை போட்டு பொரிக்கவும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பாதி வெந்தவுடன் எடுத்து விடவும்
                                     
  3. மண்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொறிந்ததும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்
                                        
  4. வெங்காயம் வெந்ததும் (பொன்னிறமாக தேவையில்லை) தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் (தக்காளி குழைய கூடாது)
                                         
  5. அடுத்து மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்
  6. பின்னர் இரண்டாம் மற்றும் மூன்றாம் தேங்காய்ப்பால் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்
                                          
  7. பிறகு அதில் பொரித்த மீன் சேர்த்து குறைந்த தீயில் 8-10 நிமிடங்கள் வேக வைக்கவும். இடையில் கரண்டி பயன்படுத்தாமல் இலேசாக சட்டியை அசைத்து கலக்கி விடவும்
                                          
  8. இறுதியாக மண்சட்டியை அடுப்பிலிருந்து இறக்கி முதல் தேங்காய்ப்பால் சேர்த்து சிறிது கறிவேப்பிலைகள் தூவி பிறகு அடுப்பில் ஏற்றி 1 நிமிடம் மட்டும் குறைந்த தீயில் வைத்து இறுதியாக ஒரு முறை கலக்கி விட்டு அடுப்பை அணைக்கவும்
                                          
  9. சுவையான அதிக காரம் இல்லாத மணமான மீன் மொய்லி தயார்
                                        
  10. ஆப்பம், இடியாப்பம், சோறு என அனைத்திற்கும் ஏற்ற குழம்பு இது!!
                                        
எனது டிப்:
எந்த வகை மீன் வேண்டுமானாலும் சேர்க்கலாம். ஆனால் சிறிது கெட்டியான சதையுள்ளதாக இருந்தால் நல்லது
0


தேவையான பொருட்கள்:

சோள ரவை : 1 1/4 கப்
தேங்காய்ப் பால் : 1 1/2 கப்
வெல்லம் : 3/4 கப்
வாழைப்பழம் : 2 / 3
உப்பு : சிட்டிகை அளவு
வெண்ணெய் அல்லது நெய் : 2 மேசைக்கரண்டி

செய்முறை:

  1. முதலில் 1/2 கப் தேங்காய் எடுத்து அரைத்து 1 1/2 கப் பால் எடுக்கவும்..
  2. பிறகு துண்டாக்கிய வாழைப்பழம் மற்றும் வெல்லம் இரண்டையும் மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்து விழுதாக எடுக்கவும்
  3. ஒரு வாணலியில் சிறிது நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சோள ரவையை சுமார் 5 நிமிடங்கள் வறுக்கவும்.. பொன் நிறமாகி நல்ல வாசனையுடன் இருக்கும் போது அடுப்பை அணைக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் வறுத்த சோள ரவை, தேங்காய்ப்பால், வாழைப்பழ வெல்ல விழுது, சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  5. அக்கலவையை எண்ணெய் தடவிய கேக் டின் அல்லது ஒரு தட்டில் ஊற்றவும்
  6. பிறகு இட்லி சட்டி அல்லது குக்கரில் ஒரு ஸ்டாண்ட் வைத்து அந்த தட்டை வைத்து முதல் 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து பிறகு 30 நிமிடங்கள் (அல்லது வேகும் வரை) குறைந்த தீயில் வைக்கவும். ஒரு ஃபோர்க்கை உள்ளே விட்டு எடுத்தால் ஒட்டாமல் வரும்.
  7. வெந்த உடன் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறியவுடன் துண்டுகளாக்கி பரிமாறவும்
எனது டிப்:
சாதாரண ரவையை வைத்தும் இது போல செய்யலாம்
0



இந்த அழகான செயின் செய்வதற்கு ரொம்ப எளிது! அதே சமயம் பார்ப்பதற்கு பாரம்பரியமான லுக் தரும். இந்த செயின்ல இருக்க பீட்ஸ் எல்லாமே பழைய உபயோகித்த A4 தாள்களில் இருந்து செய்தது தான்! எனவே அதிக செலவில்லாமல் எளிதில் கிடைக்கக் கூடிய பொருட்களிலிருந்து செய்திடலாம்... வாங்க நண்பர்களே ....இது எப்படி செய்வதுனு பார்க்கலாம்...

இந்த க்வில்லிங் செயின் செய்ய தேவையான பொருட்கள் -
1. பழைய A4 தாள்கள் (அ) மெகஸின் தாள்கள்
2. 3 மிமி க்வில்லிங் ஸ்ட்ரிப்ஸ்
3. பீட் கேப்ஸ்
4. ஜ்வெல் வயர் (அ) கம்பிகள்
5. சிறிய கோல்டன் பீட்ஸ்
6. ஹூக்
7. முத்து, மணி செயின், கற்கள்
8. ஃபெவிக்கால்

செய்முறை:

முதலில் A4 தாள் அல்லது மெகஸின் தாளை நீளவாக்கில் மெளிதான முக்கோண வடிவில் வெட்டிக் கொள்ளவும் . இதைப் போல தேவையான அளவு ஸ்ட்ரிப்ஸ் வெட்டவும்

இப்பொழுது அவற்றை க்வில்லிங் டூல் கொண்டு டைட்டாக சுற்றவும். இறுதியில் பசை கொண்டு ஒட்டவும்

இதைப் போல் அனைத்து பீட்ஸும் சுருட்டவும்

இந்த பீட்ஸை விரும்பிய வண்ணத்தில் பெயிண்ட் செய்யவும் . நான் அக்ரிலிக் மெட்டாலிக்  பேர்ல் கலர் பயன்படுத்தியுள்ளேன்

அடுத்ததாக, பெயிண்ட் செய்து வைத்துள்ள அனைத்து பீட்களையும் வளைய கம்பியில் கோர்க்கவும். இரண்டு ஓரங்களிலும் சிறிய தங்க நிற மணி சேர்க்கவும்

நோஸ் ப்ளையர் கொண்டு மற்ற முனையை வளைக்கவும். மற்றொரு டிசைனாக பீட் கேப்ஸ் பயன்படுத்தலாம்
 
இப்பொழுது இரண்டு டிசைன் பீட்களையும் கோர்த்து செயின் செய்யவும்

பென்டன்ட் செய்ய, 3மிமி க்வில்லிங் ஸ்ட்ரிப்ஸ் 7 எடுத்து க்வில்லிங் டூல் கொண்டு டைட்டாக சுற்றி பசை கொண்டு ஒட்டவும். பின்னர், பிடித்த வண்ணத்தில் பெயிண்ட் செய்யவும்.

பிறகு அதன் மீது விருப்பமான முறையில் முத்து, கற்கள் என ஒட்டி அலங்கரிக்கவும். செயினோடு இதை இணைக்க சிறிய வளையம் ஒன்று க்வில்லிங் ஸ்ட்ரிப் கொண்டு செய்து அதையும் பெயிண்ட் செய்யவும்

இறுதியில் பெண்டன்டை செயினுடன் இணைத்தால் அழகிய க்வ்ல்லிங் செயின் தயார்.

2



தேவையான பொருட்கள்:

சிவப்பு அவல் 1 கப்

தண்ணீர் 1/2 கப்
பால் 1/2 கப்
தேங்காய் பால் 1/4 கப்
சர்க்கரை 3 மேசைக்கரண்டி
நெய் 3 தேக்கரண்டி
முந்திரி, திராட்சை - கைப்பிடி

செய்முறை:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அவலை இலேசாக வறுக்கவும். பிறகு அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  2. பிறகு பாலை ஊற்றி நன்கு கிளறி சர்க்கரையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  3. இறுதியாக அடுப்பிலிருந்து இறக்கும் தருவாயில் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்
  4. நெய்யில் முந்திரி திராட்சை தாளித்து பாயசத்தில் சேர்த்து பரிமாறவும்.
எனது டிப்:
சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்து கொள்ளலாம். இ‌ன்னு‌ம் சத்தான ஆப்ஷன் இது
0



பனங்கிழங்கு பிடிக்காது இருக்குமா??? இதோ பனங்கிழங்கில் பாயசம் செய்து சுவையுங்கள் 👍
பனங்கிழங்கு கீர் / பாயசம்
தேவையான பொருட்கள் :
1. அவித்த பனங்கிழங்கு - 4
2. பால் - 1/2 லி (2 கப்)
3. பனஞ்சர்க்கரை - தேவையான அளவு (1/2 கப்) (சர்க்கரை/ வெல்லம்/ கருப்பட்டி எதுவானாலும் சேர்க்கலாம்)
4. நெய் - 2 மேசைக்கரண்டி 
5. முந்திரி, பாதாம் - 5-10
செய்முறை :
1. முதலில், பனங்கிழங்கை தோலுரித்து, நடுப்பகுதியில் உள்ள குச்சியை நீக்கவும். 2" துண்டுகளாக உடைத்து நார்களை நீக்கவும். 
2. இதை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும். 
3. அடுத்து பாலை காய்ச்சவும். பொங்கியதும், தீயைக் குறைத்து 5 நிமிடங்கள் வைக்கவும். 
4. அரைத்து வைத்துள்ள பனங்கிழங்கை சேர்த்து 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும். இடையே கிளறவும்.
5. இறுதியாக, பனஞ்சர்க்கரை சேர்த்து 2 - 4 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்த்து பரிமாறவும்.
சுவையான சத்தான பனங்கிழங்கு பாயசம் தயார்
0



இஃப்தார் (நோன்பு துறத்தல்) என்றதுமே நம் நினைவுக்கு வருவது கம கமக்கும் நோன்பு கஞ்சி தான்.. அது இல்லாமல் இஃப்தார் விருந்து நிறைவுற்ற திருப்தி இருக்காது!! 

தேவையான பொருட்கள் :
அரிசி : 1/2 கப் (ஒன்று இரண்டாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்)
பாசிப்பருப்பு : 1/4 கப்
உளுந்து : 1/4 கப்
வெந்தயம் : 1 தேக்கரண்டி
பூண்டு : 4-5 பற்கள்
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி : 1 கையளவு
தக்காளி : 1 (நான் சேர்க்கவில்லை)
ரம்பை இலை
சின்ன வெங்காயம் : 4-5 நறுக்கி
பச்சை மிளகாய் : 2
இஞ்சி பூண்டு விழுது : 1 தேக்கரண்டி
கறி மசாலா தூள் : 1 தேக்கரண்டி
உப்பு : தேவைக்கேற்ப
துருவிய தேங்காய்- 1/4 கப் (அ) தேங்காய்ப் பால் - 1/2 கப்
செய்முறை :
1) முதலில் ஒரு குக்கரில், அரிசி,பருப்பு, வெந்தயம், பூண்டு மற்றும் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆ‌கியவை சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 விசில் (அ ) குழைய வேக விடவும்
2) வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கறி மசாலா தூள் சேர்த்து தாளிக்கவும்.
3) குக்கரை திறந்து இலேசாக மசித்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். (முருங்கை கீரை சேர்க்கவும்)
4) தாளித்த கலவையை கஞ்சியில் சேர்த்து கொதிக்க விடவும் (இடையே பிடிக்காமல் இருக்க கிளறி விடவும்). தேங்காய்ப் பால் சேர்த்து, இறுதியாக மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த புத்துணர்ச்சி தரும் நோன்பு கஞ்சி தயார்.. 😋😋
0

Comments system